News

வாங்கிப் படியுங்கள்... பரப்புங்கள்.........நடுநிலை சமுதாயம் - ............நமது பள்ளியில் கிடைக்கும் ...........மாத சந்தா செலுத்தியும் பெற்றுகொள்ளலாம்

Saturday, June 6, 2015

குர்ஆனில் யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன, மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?

இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம். 
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலாம் என்ற மீன்தான்.
கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும்.
மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீங்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

onlinepj 

Friday, June 5, 2015

பாக்கியம் நிறைந்த இரவு, பராஅத் இரவு எது?

திருக்குர்ஆனைப் பாக்கியம் நிறைந்த இரவில் அருளியதாக இவ்வசனம் (44:3) கூறுகிறது. பாக்கியம் பொருந்திய இரவு எதுவென்பதை வேறு சில வசனங்கள் வழியாக நாம் அறிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆன் ரமலான் மாதத்தில் அருளப்பட்டது என்று 2:185 வசனம் கூறுகிறது. 
இந்தப் பாக்கியம் பொருந்திய இரவு ரமலானில் தான் இருக்கிறது என்பதை இதிலிருந்து அறியலாம்.
ரமலானில் 'லைலத்துல் கத்ர்' இரவில் திருக்குர்ஆனை அருளினோம் என்று 97:1 வசனம் கூறுகிறது.
44:3 வசனத்தில் பாக்கியமிக்க இரவு என்று சொல்லப்படுவதும், 97:1 வசனத்தில் மகத்துவமிக்க இரவு (லைலதுல் கத்ர்) என்று சொல்லப்படுவதும் ஒரே இரவைத்தான் குறிக்கின்றன என்பது உறுதியாகின்றது.
44:3 வசனத்தில் பாக்கியமிக்க இரவு என்று சொல்லப்படுவது ஷாபான் மாதத்தின் 15வது இரவைக் குறிக்கிறது என சிலர் வாதிடுகிறார்கள். இதற்கு குர்ஆனிலோ, ஏற்கத்தக்க நபிமொழிகளிலோ எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆன் ஷாபான் மாதத்தின் 15வது இரவில் அருளப்பட்டது என்று கூறுவது, ரமலானில் தான் அருளப்பட்டது என்ற இறைவனின் கூற்றுக்கு எதிரானது.
இந்த வசனத்தைத் தவறாக விளங்கிக் கொண்டதால் தான் 'பராஅத்' என்று ஒரு இரவை சில முஸ்லிம்கள் தாமாக உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
'பராஅத் இரவு' என்ற சொல் திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலோ பயன்படுத்தப்படவே இல்லை. இல்லாத ஒரு இரவைக் கற்பனை செய்து, அல்லாஹ்வின் வசனத்திற்குப் பொருத்தமற்ற விளக்கம் கொடுத்து அந்த நாளுக்கென்று சில சடங்குகளை உருவாக்கி, அறியாத முஸ்லிம்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஷாபான் மாதத்தில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாக நம்புவது, ரமலானில் அருளப்பட்டது என்ற குர்ஆனின் கூற்றுக்கு எதிரானது என்பதை அவர்கள் விளங்க வேண்டும்.
அவர்கள் தங்களின் தவறான கருத்துக்கு மற்றொரு விளக்கத்தையும் தருகிறார்கள். அதாவது, பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு திருக்குர்ஆன் அருளப்பட்டது பராஅத் இரவு, அங்கிருந்து சிறிது சிறிதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது லைலதுல் கத்ர் இரவு எனக் கூறுகிறார்கள். இதற்கு ஏற்கத்தக்க ஹதீஸ்களில் எந்தச் சான்றும் இல்லை.
திருக்குர்ஆன் ஒரே இரவில் அருளப்பட்டதா என்பதை அறிய 447வது குறிப்பைக் காண்க!